அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம் – சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவிப்பு!
Thursday, March 21st, 2024
அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (20.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்த எதிர்பார்க்கப்படுவதோடு, 2000 ஹெக்டயாரில் தேயிலை நடுகைச் செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மீன்பிடித் தொழிலுக்கு விசேட கடன் நிவாரணம் வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், கடற்றொழில் அமைச்சு, சமூக வலுவூட்டல் அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி வங்கியுடன் இணைந்து உவர் – நன்னீர் கடற்றொழில் குடும்பங்களை வலுவூட்டுவதற்கான சலுகைக் கடன்களை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடல் அட்டை உற்பத்திக்காக 400 குடும்பங்களுக்கு சலுகைக் கடன் வழங்கப்படவுள்ளது. மீன்பிடி படகுகள் உள்ளிட்ட மீன்பிடித் தொழில்துறைக்கு அவசியமான உபகரணங்களை வழங்குவதே இத்திட்டதின் பிரதான நோக்கமாகும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


