அழுத்தங்களும் பிரச்சினைகளும் இன்னும் முடியவில்லை – தற்காலிகமாகவே அடங்கியுள்ளது – மீண்டும் பாரதூரமான நிலைமை ஏற்படலாம் என சபாநாயகர் கடும் எச்சரிக்கை!

Tuesday, September 20th, 2022

நாட்டின் ஆட்சியாளர் ஆட்சியை கைவிட்டு செல்லும் அளவுக்கு பாரதூரமான நிலைமை நாட்டுக்கு ஏற்பட்டமைக்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருப்பதாகவும் பிரச்சினை தற்காலிகமாக அடங்கியுள்ளது எனவும் இதனால், தற்போது காணப்படும் நிலைமையை விட மிகவும் பாரதூரமான நிலைமை எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாத மட்டத்திற்கு நாடு சென்றால், மதத் தலைவர்கள் மாத்திரமல்ல அரசாங்கத்தினாலும் எதனையும் செய்ய முடியாது. இதனால், நாடு அந்த நிலைமைக்கு செல்ல இடமளிக்காது நாட்டை பாதுகாக்க வேண்டியது அனைவரது பொறுப்பும் கடமையுமாகும் எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

காலி ஹபரகடவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.

மேலும் நாட்டில் எப்படியான நிலைமை இருந்திருந்தால், நாட்டின் ஆட்சியாளர் நாட்டின் ஆட்சியை கைவிட்டு சென்றிருப்பார். தமது ஆட்சியை கைவிட்டு, யாருக்கும் தெரியாமல் திடீரென செல்லும் அளவுக்கு நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள், சிக்கல்கள் அழுத்தங்கள் இருந்திருக்கும். அந்த அழுத்தங்களும் பிரச்சினைகளும் இன்னும் முடியவில்லை. தற்காலிகமாக அடங்கியுள்ளது. சிறிது ஆறுதல் கிடைத்துள்ளது.

தற்போது விகாரைகள் உட்பட அனைவருக்கும் மின் கட்டணங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இது தாங்கிக்கொள்ளக் கூடிய சுமையல்ல. தண்ணீர் கட்டணங்களும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மிகப் பெரிய செலவை சமாளிக்க வேண்டியுள்ளது. மிகவும் கவனமாகவும் சிக்கனமாகவும் மின்சாரம் மற்றும் தண்ணீரை பயன்படுத்த வேண்டியுள்ளது.

விகாரைகளால், அதனை செய்ய முடியாது அவை பொது இடங்கள். விகாரைகளை இருளில் வைத்திருக்க முடியாது. விகாரைகளுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.

அதிபர், பிரதமர் மற்றும் மின்சக்தி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி விகாரைகளுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: