அர்ப்பணிப்பதே எனது குறிக்கோள் – மேதினச் செய்தியில் ஜனாதிபதி

Saturday, April 30th, 2016

‘2015 இல், நாம் அடைந்த புதிய ஜனநாயக சுதந்திரப் பிரவேசத்தினூடே, புதிய பொருளாதார, அரசியல் அவகாசத்துக்குள் காலடி வைத்துள்ள தற்போதைய சூழலில் மலர்ந்துள்ள இந்த மே தினத்தில், ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தினரின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொண்ட வெற்றியினை யதார்த்த மாக்குவதற்கு அர்ப்பணிப்பதனை, எமது மே தினத்தின் குறிக்கோளாகக் கொள்வோம்’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது –

உலகெங்கிலும் உள்ள பாட்டாளி மக்கள், மே தினத்தன்று தம் கரங்களில் ஏந்தும் சிவப்பு நிறக் கொடி, தொழிலாளர்கள் ஒற்றுமையினதும் தொழிலாளர் வெற்றியினதும் நீண்ட வரலாற்றைக் குறித்து நிற்கின்றது.  உலகவாழ் பாட்டாளி மக்கள் என்ற ரீதியில் நெற்றி வியர்வை சிந்திப் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி, மே முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. தொழிற்சாலையில், வேலைத்தளத்தில், பண்ணையில் அல்லது வேறெந்த இடத்திலும் வியர்வை சிந்தி தமது உழைப்பினை வழங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் விடும் பெருமூச்சு மற்றும் துயரம் ஆகியன, மே தினத்தின் உயிர்மூச்சாகக் கருதப்படுகிறது. தொழிலாளர்களின் ஊழியம் எனும் சிறிய பற்களைக் கொண்ட சில்லுகளின் கூட்டுச் செயற்பாட்டினூடாகவே, உற்பத்தி எனும் பாரிய இயந்திரம் தொழிற்படுகிறது. உலகம் முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு கட்டத்திலும், எவரேனும் ஓர் உழைப்பாளி சிந்தும் வியர்வை மற்றும் கண்ணீர் ஆகியன அடையாளமாக அமைகின்றது.

மே தினத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக, இவ்வியர்வைக்கும் கண்ணீருக்குமே உலகம் தனது கௌரவத்தைத் தெரிவிக்கின்றது. மே தினத்தன்று வரிசைப்படுத்தப்படும் ஒவ்வொரு கொடியும், இரத்தத்தினால் உயிர்ப்பிக்கப்படும் ஆச்சரியம் நிறைந்த வியர்வை மற்றும் கண்ணீருக்கு நன்றி தெரிவிப்பதற்கே மேலுயர்த்தப்படுகிறது. 1956இல் நாம் வென்றெடுத்த மக்கள் வெற்றியின் பின்னர், எமது பாட்டாளி மக்களின் தொழில்சார் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய வினைத்திறன் மிக்க பாதையில் நாம் இன்று தடம் பதித்துள்ளோம்.  ஒட்டுமொத்த பாட்டாளி மக்களினதும் வெற்றிகளும் உரிமைகளும் பாதுகாக்கத்தக்க ஒரு மே தினம் மலரட்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: