அரச ஊடகங்களின் பணிப்பாளர் சபையில் தமிழ் பிரதிநிதிகளையும் உள்ளடக்க நடவடிக்கை – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Monday, October 25th, 2021

நஷ்டத்தில் இயங்கும் அரசாங்க ஊடகங்களை மீண்டும் இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டுவர ஆக்கபூர்வமான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அரசாங்க ஊடகங்களில் படைப்பாற்றல் குறைந்து வருவதை ஏற்றுக் கொண்ட அமைச்சர், இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வெகுஜன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊடகமொன்றைப் பராமரிப்பதற்கு ஒரு நிறுவனத்துக்கு மாதமொன்றுக்கு 35 மில்லியன் ரூபா செலவுசெய்ய வேண்டியிருப்பதாகவும், சில நிறுவனங்களுக்கு 45 மில்லியன் ரூபா வரையில் செலவாவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசாங்க ஊடகங்கள் வணிக ரீதியாகத் தோல்வியடைவதை அரசாங்கத்தினால் தாங்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைவிடவும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் வன்முறைகள் நிறைந்த மற்றும் சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற விடயங்களுடன் கூடிய திரைப்படங்கள் விளம்பரப்படுத்தப்படுவதாகவும், அவற்றை விளம்பரப்படுத்தப் பொருத்தமான ஒளிபரப்பு நேரத்தைப் பரிந்துரைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் நாடாளுமன்ற அமர்வுகளை அறிக்கையிடும் ஊடகங்களில் முக்கியமான விடயங்கள் தவிர்க்கப்படுவதாகவும், இதனால் நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்ற நாட்டுக்கு முக்கியமான சட்டமூலங்களை சமர்ப்பிப்பது, அவற்றை நிறைவேற்றுவது மற்றும்  அவை தொடர்பான விவாதங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய விசேட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அமைச்சர் அரசாங்க ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை வடபகுதியில் உள்ளவர்களில் 85 சதவீதமானவர்கள் இந்தியத் தொலைக் காட்சிகளைப் பார்வையிடுவதற்குப் பழகியிருப்பதால் அப்பகுதிகளில் உள்ள சிறுவர்கள் மத்தியில் இந்நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் பொது அறிவு குறைவாகவே உள்ளது என்பதும் இதன்போது தெரியவந்தது.

அரசாங்க ஊடகங்களின் ஊடாக வழங்கப்படும் தகவல்கள் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் சரியாகக் கடத்தப்படாமையே இதற்குக் காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்க ஊடகங்களின் பணிப்பாளர் சபையில் தமிழ் பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமையின் காரணமாக அடுத்த வருடம் அமைச்சுக்கான எந்தவொரு புதிய கட்டுமானப் பணிகளுக்கும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கப்படாது என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts: