அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்றுமுதல் மாகாண ரீதியாக அடையாள வேலை நிறுத்தம் – வட மாகாணத்தில் நாளைமுதல் நாளைமறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிப்பு!

Thursday, November 2nd, 2023

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்  இன்றுமுதல் மாகாண ரீதியாக அடையாள வேலை நிறுத்த தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேற்படி அறிவித்துள்ளனர்

அதன் அடிப்படையில் வட மாகாணத்தில் நாளை வெள்ளிக்கிழமை (03/11/2023) காலை 8 மணியிலிருந்து மறுநாள் சனிக்கிழமை (04/11/2023)காலை 8:00 மணி வரை போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

அத்துடன் பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும், அதை தடுப்பதற்குரிய வழி வகைகளைப் பற்றியும் ஆட்சியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்தியிருந்தோம். இருப்பினும் இதுவரை எந்தவிதமான சாதகமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் உரிய தரப்பினால் மேற்கொள்ளப்படாத நிலையில் நாம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

நாளை முன்னெடுக்கப்பட உள்ள இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தின்போது வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெற மாட்டாது. மற்றும் மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும்.

அரசாங்கமானது எமது முன்மொழிவுகளினூடாக தற்சமயம் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முன்வர வேண்டும். அவ்வாறு தீர்வை வழங்கி வைத்தியர்களை நாட்டில் தக்க வைத்து இலவச சுகாதார சேவையை பேணுவதற்கு தவறும் பட்சத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஆகிய நாங்கள் நமது போராட்டத்தை தீவிர படுத்த வேண்டி ஏற்படும் எனஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: