அரசியலமைப்பு பேரவைக்கு நிமல் சிறிபாலவை பரிந்துரை செய்தார் ஜனாதிபதி!

Saturday, November 12th, 2022

அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமல் டி சில்வா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இந்த வாரத்தில் இரண்டு தடவைகள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதன்போது அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்ற வகையில் சபாநாயகர்,சபைக்கான தமது வேட்பாளர்களை பெயரிடுமாறு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரியிருந்தார்.

அதன்படி பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் தங்களது வேட்பாளர்களின் பெயரை தாமதமின்றி அறிவிப்பதாக உறுதியளித்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை அந்த சபைக்கான வேட்பாளராக பெயரிட்டுள்ளார்.

அரசியலமைப்பு சபையில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் நியமனம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற சிறிய கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் உள்ளடக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: