அமைச்சர் டக்ளஸ் வழிகாட்டல் – மீனவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு துரித நடவடிக்கை – .இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவிப்பு!

Thursday, October 19th, 2023

தமிழ் நாட்டு மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை உடனடியாக முற்றுமுழுதாக தடுத்து நிறுத்த முடியாது. எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர், இந்திய அரசாங்கத்தின் இணக்கத்துடன் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் மீனவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய உலக மீனவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் மாதம் 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் குறித்த இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

யாழ்ப்பாணத்தில் 21 ஆம் திகதி இடம்பெறும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதோடு, அங்குள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தவுள்ளார்.

எவ்வாறிருப்பினும் தமிழ் நாட்டு மீனவர்கள் வடக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுப்பது வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பாரிய சவாலாகக் காணப்படுகிறது. முன்னர் இந்த மீனவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டில்லி விஜயத்தின் பின்னர் இந்திய அரசாங்கத்தின் இணக்கத்துடன் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவது மாத்திரமின்றி குறித்த படகினை செலுத்துபவரது அனுமதிப் பத்திரத்தை 6 மாதங்களுக்கு இரத்து செய்யவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை கடும்போக்கில் அணுக முடியாது. அது இரு நாடுகளுக்குமிடையில் இராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே படிப்படியாகவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைக் காண முடியும் என்றும் திவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0000.

Related posts: