அமரர் ஆறுமுகனின் தொண்டமானின் பூதவுடல் பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

Friday, May 29th, 2020

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீதியின் இரு மருங்கிலும் கூடியிருந்த பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, அன்னாரின் பூதவுடலுக்கு கண்ணீர் மல்க மலர் துவி தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

இதேவேளை பிரதான நகரங்களில் உள்ள கடைகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

மலையகத்தின் பெரும் பகுதிகள் இன்று சோகமயத்தில் ஆழ்ந்துள்ளது. அமரர். ஆறுமுகனின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலை எடுத்துச் சென்ற ஹெலிக்கொப்டர், கம்பளையில் மைதானம் ஒன்றில் தரையிறங்கி அங்கிருந்து தரைவழியாக மக்கள் அஞ்சலியுடன் வேவண்டனுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள் மக்கள் அஞ்சலியுடன் அமரர்.ஆறுமுகனின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது, ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருவதோடு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடதக்கது.

Related posts: