அன்பளிப்பு பொருள்கள் பெறுவதை அரச ஊழியர்கள் தவிர்க்க வேண்டும் – இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவுறுத்து!
Thursday, December 29th, 2016பண்டிகை காலத்தில் அரச அதிகாரிகள் அன்பளிப்பு பொருட்கள் பெறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் இது தொடர்பில் அறிவிப்பு ஒன்றை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு பொது நிர்வாக அமைச்சகத்தின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது.
பண்டிகை காலங்களில் வியாபார நிறுவனங்கள் அரச அதிகாரிகளை கவருவதற்காக அன்பளிப்பு பொருட்களை வழக்கமாக வழங்கி வருகின்றன. இதன் காரணமாக பொது மக்கள் மத்தியில் அரச அதிகாரிகள் சம்பந்தமாக தவறான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடுகள் ஊழல் மோசடிகளுக்கும் வழி வகுக்கும் என்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்துகளை தெரிவித்த ஊழல்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் “டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல்” இலங்கை கிளையின் தலைவர் வழக்கறிஞர் லக்ஷான் டயஸ், ஊழல் விசாரணை ஆணைக்குழு எடுத்துள்ள இந்த தீர்மானத்தை வரவேற்பதாக அறிவித்தார்.
விசேடமாக சுங்கம், வங்கி மற்றும் அரசுத் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு பண்டிகை காலத்தில் வர்த்தக நிறுவனங்களின் முலம் இலட்சக்கணக்கான அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவித்த அவர் சட்ட விரோதமான உதவிகளை பெற்றுக்கொள்வதற்காகவே அவர்கள் இதனை வழங்குவதாகத் தெரிவித்தார்.
இது இலஞ்சம் என்று கூறிய வழக்கறிஞர் லக்ஷான் டயஸ், இவ்வாறு அன்பளிப்பு பொருட்களை பெற்றுக்கொள்ளும் அரசு அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மேலும் வேண்டுகோள் விடுத்தார்.
Related posts:
|
|