அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை!

Friday, October 2nd, 2020

நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்பட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கண்டி மாவட்டத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் வைத்தியசாலைகள், எதிர்காலத்தில் மாகாணத்திற்கொரு வைத்தியசாலை என்ற ரீதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு முன்னெடுத்து செல்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 125ஆவது ஆண்டு விழா என்பவற்றை முன்னிட்டு தீவிர சிகிச்கை மற்றும் அறுவை சிகிச்சை நிலையம் என்பவற்றை உள்ளடக்கிய ஒன்பது மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் எலும்பு மாற்று சிகிச்கை மற்றும் புதிய அறுவை சிகிச்சை கட்டட திறப்புவிழா ஆகியவற்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் சிறுவர் வைத்தியசாலைகள் குறைந்தபட்சம் மாகாணத்திற்கு ஒன்றாவது உருவாக்கப்பட வேண்டும் என எமது அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. எது எவ்வாறாயினும் இன்று குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானதாகும். இந்த குழந்தைகள் தான் எதிர்காலத்தில் எமது நாட்டை பொறுப்பேற்கவுள்ள தலைவர்கள். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது எமது பொறுப்பாகும்.

பாடசாலைகளுக்கு எமது விசேட வைத்திய நிபுணர் பாதெணிய கஞ்சி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளார். அனைத்து பிள்ளைகளுக்கும் ஒரு கோப்பை கஞ்சி போன்ற போசாக்கான பானமொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாங்களும் கல்வி அமைச்சருக்கு முன்மொழிவொன்றை முன்வைக்கிறோம். எமது ஆட்சிக்காலத்தில் நாம் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்படுவதற்கு தயாராக உள்ளோம் என்பதை இத்தருணத்தில் ஞாபகப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: