அனைத்து பாடசாலைகளையும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் திறப்பதற்கு நடவடிக்கை – எதிர்வரும் வெள்ளியன்று பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, September 12th, 2021

கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக நாட்டில் கடந்த ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீண்டும் திறப்பதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சுகாதார பரிந்துரைகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பரிந்துரைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா ஒழிப்புக் குழுவுடனான கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையில் நடைபெறும்போது இந்தப் பரிந்துரைகளை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கனவே சுகாதாரதுறை அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் ஆகியோருடன் ஆராய்ந்து வருகின்றனர். அடுத்த வாரம் சுகாதார அமைச்சர் இந்தக் குழுவைச் சந்திக்க உள்ளார்.

மேலும், பாடசாலைகள் திறப்பது தொடர்பாக பல முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன. தரம் 7 முதல் 13 ஆம் தரம் வரை முதலில் திறக்க வேண்டும் என்பது ஒரு பரிந்துரை.

1, 2, 3 மற்றும் 4 வகுப்புகளை முதலில் திறக்க வேண்டும் என்ற மற்றொரு திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா பரவல் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.  வழிகாட்டல்களை தயாரிக்கும் குழுவின் தலைவராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் செயற்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

‘பாடசாலை’களை மீள ஆரம்பிப்பது சம்பந்தமாக ஆராயும் குழுவின் அறிக்கை எதிர்வரு;ம 17 ஆம் திகதி கொவிட் தொற்று பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் குறித்த குழு கூடி விரிவாக ஆராய்ந்துள்ளது.

இதன்போது கல்வி அதிகாரிகள், சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள், தொற்றுநோய் தடுப்பு நிபுணர்கள், குடும்ப சுகாதார அதிகாரிகள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளும் பங்கெடுத்து தமது கருத்துக்களையும் பரிந்துரைகளையும்  முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: