அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எதிர்வரும் வாரம்முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எதிர்வரும் வாரம்முதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் செயற்படுத்தப்படுமெனவும் போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –  கொரோனா தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் வாரம்முதல் பல அத்தியாவசிய சேவைகளை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை பேணுவது அவசியமாகும். ஆனால் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளில் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிப்பதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகிறது. பயணத்தடை தளர்த்தப்பட்டவுடன் பொது போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் செயற்படுத்தப்படும்.

அரச மற்றும் தனியார் சேவையாளர்கள் கடமைக்கு வருகைதரும் நேரத்தை மாற்றியமைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு சேவையாளர் ஒரு வாரத்தில் குறைந்தளவு நாள்களில் சேவைக்கு வருகைதரும் செயற்திட்டம் மீண்டும் செயற்படுத்தப்பட எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணம் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அலுவலக புகையிரத சேவையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போதைய நெருக்கடியான சூழலில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தேவைற்ற பயணங்களை முடிந்தளவுக்கு குறைத்துக் கொள்வது அவசியமாகுமெனவும் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: