அத்தியாவசிய பொருட்களை சாதாரண விலையில் விநியோகிக்க நடவடிக்கை – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Wednesday, November 9th, 2022

பண்டிகை காலங்களில் விலை அதிகரிப்பின்றி அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடில்லாமல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அதனைக் கடைப்பிடிப்பது தொடர்பில் தேசிய உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி இணைந்கொண்டுவந்த நாட்டின் தற்போதைய நெருக்கடி தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

பண்டிகை காலங்களில் விலை அதிகரிப்பின்றி அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடில்லாமல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அதனைக் கடைப்பிடிப்பது தொடர்பில் தேசிய உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இறக்குமதி செய்யும் 10 உணவுப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டமை மக்களுக்கு சிறந்த நிவாரணமாக அமைந்துள்ளது. அதில் அரிசி, கோதுமை மா, பருப்பு உள்ளிட்ட முக்கிய அத்தியாவசிய உணவுப் பொருட்களும் அதில் உள்ளடங்கியுள்ளன.

அத்துடன் எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தமையே எமது டொலர் நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகள் 70 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை எமக்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.

மேலும் அரிசி,முட்டை ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. இறக்குமதி செய்யப்படும் அரிசி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அடுத்த அறுவடையின் பின்னர் அரிசியின் விலை மேலும் குறைவடையும்.

மேலும் நாடளாவிய ரீதியில் நுகர்வோரின் தேவைகளை கண்காணிப்பதற்காக 227 நுகர்வோர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களின் பிரதான தேவைகள் தொடர்பில் அந்த குழுக்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். மலையகத்தில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. படிப்படியாக அவை தீர்க்கப்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: