அதிகாரப் பகிர்வு இல்லாமல் இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை காண முடியாது – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, March 8th, 2024

இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் நாட்டை சரியான திசையில் எவராலும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. எவ்வாறாயினும் அதிகாரப் பகிர்வு இல்லாமல் இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை காணவும் முடியாதென வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

அதேபோன்று, சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வு நாட்டில் மிக அவசியமாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

சபையில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் –  உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது.  இது தொடர்பில் 56 கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு அண்மைக்காலமாக 500 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் முழுமையான தீர்வை வழங்க முடியாவிட்டாலும்  இதற்கு தீர்வொன்று வழங்கப்பட வேண்டும்.  இதில் உறுதியாக உள்ளோம்.

மேற்படி அலுவலகத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியல் ரீதியில் நீண்ட காலமாக இரண்டாக பிளவுபட்டு செயல்பட்டுள்ளோம்.

இனபிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு மிக அவசியம். புலம்பெயர்ந்தோர் அமைப்புகள் தொடர்பில் எமக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது. எனினும் அவர்களில் ஒரு தரப்பினர் தனியான அரசு தொடர்பிலேயே பேசுகின்றனர்.

தேசிய பிரச்சினைக்கான தீர்வு பற்றி தெரிவிக்கும்போது சமஷ்டி தீர்வை கோருவதற்கான உரிமை தமிழ் தரப்பினருக்கு உள்ளது. அதனை மறுக்க முடியாது. 

இது தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பும் உள்ளது. நாம் அதனை வழங்குகின்றோமோ இல்லையோ அதனை கோருவது அவர்களது உரிமை.  இதனை வழங்குவதா? இல்லையா? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பரென்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: