அடிப்படை தேவைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு வலியுறுத்தி திருநெல்வேலிப் பொதுச் சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு நடவடிக்கை

Wednesday, May 4th, 2016

திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபாரிகளுக்கான நீர் விநியோகம் சீராக இடம்பெறாமை,  மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை, சந்தையிலுள்ள மலசலகூடங்கள் சுத்தமற்றுக் காணப்படுகின்றமை  உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு பெற்றுத் தருமாறு வலியுறுத்தி வியாபாரிகள்  தமது இட வாடகையை  வழங்க எதிர்ப்புத் தெரிவித்து  நேற்று  (03)   காலை எதிர்ப்பு  நடவடிக்கையில் ஈடுபட்டனர் . மேற்படி கோரிக்கைகள் ஏற்கனவே பல தடவைகள் முன்வைக்கப்பட்ட போதும் பலனிக்காத நிலையிலேயே சந்தை வியாபாரிகள் அனைவரும் இட வாடகையை வழங்க முடியாது எனக் கோரி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது அங்கு வருகை தந்த நல்லூர் பிரதேச சபையின் பிரதம வரி அறவீட்டாளர் நீங்கள் வரி செலுத்தத் தவறினால் உங்களுக்குச் சந்தையில் விற்பனை செய்வதற்கு இடமில்லாமல் போகுமெனவும் , அனைத்து வியாபாரிகளும் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டி வருமெனவும் கடும் தொனியில் எச்சரித்துள்ளார். இதனையடுத்து  வரி அறவீட்டாளருக்கும்  , சந்தை வியாபாரிகளுக்குமிடையே கடும் வாக்கு வாதம் இடம்பெற்றது.

சந்தையில் பிரதேச சபையால் நீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சந்தையிலுள்ள சில வியாபாரிகள் சந்தைக்கு அண்மையிலுள்ள உணவகங்களில் தான் குடிநீரைப் பெற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்த வியாபாரிகள் சந்தையிலுள்ள அனைத்து வியாபாரிகளும் இவ்வாறு நீரைப் பெற முடியாதெனவும் கவலை வெளியிட்டனர். கடும் வெப்ப காலநிலை நிலவும் இந்தக் காலகட்டத்தில்  நீர் வசதியின்றித் தாம் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் மின்சார வசதிகள்  உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக இலத்திரனியல் தராசினை உபயோகிக்க முடியாதுள்ளது.

thiru 3

ஆண்களுக்கும் , பெண்களுக்கும் தனித் தனியாக அமைக்கப்பட்ட மலசலகூடங்கள் உரிய பராமரிப்பின்றி மோசமான நிலையில் காணப்படுவதால் நாமும் , மரக்கறிகள் கொள்வனவு செய்யவரும் நுகர்வோரும் பெரும் சுகாதார ரீதியான நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றோம். மலசலகூட கூடக் கதவொன்றின் கதவு உடைந்து காணப்படுவதால் அதனைப் பயன்படுத்த முடியாதுள்ளதாகவும் , மலசலகூடங்கள் சுத்தமின்றிக் காணப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கின்றனர் .

நாளாந்தம் இட வாடகை வழங்கி வரும் நாங்கள் குடிநீர் வசதி, மின்சார வசதி , மலசல கூடம் சுத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தமை குற்றமா ? எனக் கேள்வியெழுப்பும் சந்தை வியாபாரிகள் எமது கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த எம்மை  நல்லூர் பிரதேச சபையின் பிரதம வரி அறவீட்டாளர்  கடுமையாக எச்சரிக்கும் வகையில் செயற்பட்டமை எந்த வகையில் நியாயம்? என வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

thiru 2

பொதுச் சந்தையின் கீழ்ப் பகுதியில் மலசலகூடத்துக்கு அருகில் இறைச்சிக் கடைக்குச் செல்கின்ற பாதையில் கழிவு நீர் தேங்கி நிற்பதாலும் வியாபாரிகளும், சந்தைக்கு வருகை தரும்  நுகர்வோரும் அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,வியாபாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்துச்  சந்தையின் வியாபார சங்க நிர்வாகிகளை நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் பிரதேச சபைக்கு  அழைத்து அவர்களுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன் போது இட வாடகையைத் தொடர்ந்தும் வழங்குமாறும், வியாபாரிகளின் கோரிக்கைகள்அனைத்துக்கும் எதிர்வரும் ஒரு வார காலத்தில் தீர்வு பெற்றுத் தரப்படும் எனவும் உறுதியளித்தார்.

Related posts: