10,588 மாணவர்கள் மேலதிக உள்ளீர்ப்பு – பல்கலைக்கழகங்களில் வசதிகளை அதிகரிக்க பிரதமர் அறிவுறுத்து!

Wednesday, March 3rd, 2021

பல்கலைக்கழகங்களில் வசதிகளை மேம்படுத்துவதற்கு மேலதிக ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்ட பத்தாயிரத்து 588 பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்றவாறே பல்கலைக்கழக வசதிகளை மேம்படுத்துவதற்கு பிரதமரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது குறித்து அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான கலந்துரையாடலின்போதே  பிரதமர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாண்டில் 41 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, சுதந்திரத்தின் பின்னர் முதன்முறையாக இம்முறை 10 ஆயிரத்து 588 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய வைத்திய பீடங்களில் மாத்திரம் 479 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இது நான்கு புதிய வைத்திய பீடங்களை ஆரம்பிப்பதற்குச் சமமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களின் ஆதரவினாலேயே இவை அனைத்தையும் நிர்வகிக்க முடிந்ததென்றும், பல்கலைக்கழக அமைப்பின் பௌதீக மற்றும் மனித வளங்களை நிர்வகிக்கக் கூடுதலாக சுமார் ஐந்து பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்காக இதுவரை வழங்கப்படும் நிதிக்கு மேலதிகமாக, இந்தக் கூடுதல் நிதியைக் கட்டம் கட்டமாக பல்கலைக்கழக அமைப்புக்கு வெளியிடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார்.

அத்துடன், சம்பந்தப்பட்ட முறையைப் பொதுத் திரைசேறி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து கலந்துரையாடலின் மூலம் தீர்மானித்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

000

Related posts: