08 மாதங்களில் 7 இலட்சம் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன – இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, September 13th, 2022

இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களில் 700,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகள், 2016 ஆம் ஆண்டு முழுவதும் வழங்கப்பட்ட 658,725 கடவுச்சீட்டுகளின் சாதனையை முறியடித்து, பயண ஆவணங்களின் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இடம்பிடித்துள்ளன.

திணைக்களத்தின் வரலாற்றின் படி, ஓகஸ்ட் 2022 இறுதி வரையிலான கடவுச்சீட்டுகளின் வழங்கல் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 171,168 கடவுச்சீட்டுகளில் இருந்து 312% அதிகரித்து 705,412 ஆக வழங்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாத கடவுச்சீட்டு வழங்கல் முடிவு, முந்தைய ஆண்டு இதே காலத்தில் வழங்கப்பட்ட 28,976 கடவுச்சீட்டுகளுடன் ஒப்பிடுகையில் 297% கணிசமான உயர்வைக் கண்டுள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை கடவுச்சீட்டுக்காக மொத்தம் 116,244 விண்ணப்பங்கள் பெறப்பட்டதுடன், அதில் 115,152 விண்ணப்பங்கள் மட்டுமே அந்த மாதத்தில் வழங்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 88,170 கடவுச்சீட்டுகள் மாதாந்தம் வழங்கப்பட்டன.

தற்போது, திணைக்களம் நாளாந்தம் 4,000 விண்ணப்பங்களை பெறுகிறது. ஓகஸ்ட் 2022 இறுதி வரையிலான தரவு, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இடம்பெயர்வதற்கான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை தெளிவாகக் குறிக்கிறது.

000

Related posts: