வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கு சீனா உதவும் – அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை!

Tuesday, July 4th, 2023

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் சீனா உதவும் என இலங்கை நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை சீனா கொண்டிருப்பதால் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னேறி வருவதாக அலி சப்ரி கூறியுள்ளார்.

கடந்த வாரம் சீனாவுக்கு சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர், அங்கு பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து பாரிஸ் கிளப், உருவாக்கிய மேடையில் சீனா பார்வையாளர்களாக பங்கேற்றுள்ளது.

எனவே கடன் மறுசீரமைப்பில் சீனா இலங்கைக்கு உதவும் என்பதில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

41 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ள வெளிநாட்டுக் கடனையும், உள்நாட்டுக் கடனான 42 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் மறுசீரமைக்க இலங்கை முயல்கிறது.

முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று, அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றது.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மதிப்பாய்வுக்கான இரண்டு மறுசீரமைப்பு செயல்முறைகளும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற இக்கட்டில் இலங்கை இருப்பதாக இந்திய ஊடகமான பிடிஐ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: