விவசாயிகளுக்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவேன் -ஜனாதிபதி!

Thursday, August 11th, 2016

வியர்வை சிந்தி நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுவடையச் செய்யும் விவசாயிகளுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு அரச கொள்கைக்கு அமைய தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று எம்பிலிப்பிட்டிவில் நடைபெற்ற மகாவலி மகா விவசாயி, சிறந்த மகாவலி விவசாய அமைப்புக்கான பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கும் வைபவத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

வறுமை மற்றும் கடன் சுமையிலிருந்து விவசாயிகளை மீட்டெடுத்து அவர்களது பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளின் ஊடாக விவசாயத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை நிறைவேற்றுவதற்கு பொறுப்பு வாய்ந்த சகல நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.

ரஜரட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி இன்று மொராஹாகந்த – களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, புதிய திட்டமிடல் மற்றும் வேலைத்திட்டத்தினூடாக மகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தி விவசாயப் பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

2020ஆம் ஆண்டளவில் தேசிய அபிவிருத்தி இலக்கினை அடைந்துகொள்வதற்காக நான்காண்டு தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்வதற்காக மகாவலி விவசாயிகளை ஊக்குவித்தல், நச்சுத்தன்மையற்ற தரமான உற்பத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக விவசாயிகள் மத்தியில் மனோபாவ ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மகாவலி அதிகார சபையினால் இந்நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு  செய்யப்பட்டது.

Related posts: