வித்தியா கொலை வழக்கு: கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதம்!

Monday, May 15th, 2017

புங்குடுதிவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி போராட்டம் இன்று மாலைவரை முன்னெடுக்கப்படுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘வித்தியாவிற்கான நீதி விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் வேண்டும்’, ‘மாணவியின் நீதி விசாரணையை கொழும்புக்கு மாற்றி ஏமாற்றாதே’ போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளதாகவும், மேற்படி போராட்டத்தில் மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். மேல் நீதிமன்றில் தற்போது நடைபெற்று வரும் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணைகளை விசேட அமர்வுகள் மூலம் விசாரிப்பதற்கு கொழும்பிற்கு மாற்றுவதால் குறித்த வழக்கின் தீர்ப்பு திசை திருப்பப்படலாம் என மக்கள் அச்சம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: