வாக்கெடுப்பில் கூட்டமைப்பு பங்குபற்றாதாம்?
Thursday, June 9th, 2016
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றப்போவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணியான ஒன்றிணைந்த பொது எதிரணியால் நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை மீதான விவாதம் நேற்று நடைபெறவிருந்தபோது சபையின் ஒலிவாங்கி கட்டமைப்பு திடீரென செயற்படாது போனதன் காரணமாக சபை நடவடிக்கைகள் இன்று காலை 9.30வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன
இந்நிலையில் குறித்த நம்பிக்கையில்லாப்பிரேரணையை ஆதரிப்பதா இல்லை எதிர்ப்பதா என்பது தொடர்பிலான தீர்மானத்தை நேற்று காலை 11.30 இற்கு நடைபெறும் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் எடுப்பதாக நேற்று முன்தினம் நடைபெற்ற குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது
அதன் பிரகாரம் நேற்று எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கூட்டமைப்பு கலந்து கொள்ளப்போவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
அத்தோடு எதிர்வரும் 25ஆம் திகதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடுவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|