வருட இறுதிக்குள் நாட்டின் தேவைக்கு மேலதிகமாக 6 மில்லியன் கிலோ அரிசி கையிருப்பில் – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உத்தரவாதம்!

Monday, April 5th, 2021

சம்பா அரிசியை 89 ருபாவுக்கும், நாட்டரிசியை 90 ருபாவுக்கும் சதொச நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனியார் துறையினருடன் விவசாய அமைச்சு போட்டி தன்மை நிலையை ஏற்படுத்தியதன் ஊடாக தற்போழுது அரிசி விலை வீழ்சசியடைந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையில் அனுராதபுரம் ஜெயஸ்ரீ மாபோதியில் நடைபெற்ற தேசிய புத்தரிசி நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவசாயிகளின் உற்பத்திக்கு கூடுதலான விலையை வழங்குவது போன்று, குறைந்த விலையில் அரிசியை நுகர்வோருக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

சவால் மிக்க இந்த திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிமுதல் நாட்டில் உள்ள 500 சதொச கிளை வலைப்பின்னல் ஊடாகவும், 2,500 கூட்டுறவு விற்பனை நிலையங்களுடாகவும் 93 ரூபாவுக்கு அரிசியை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அதனடிப்படையில் தற்பொழுது சந்தையில் அரிசியை 93 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக 23 ஆயிரம் மில்லியன் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எம்மால் முடிந்துள்ளது. 18 ஆயிரம் தொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாகவும், கூட்டுறவு சங்கங்கள் ஊடாக 5,000 தொன்னையும், மாவட்ட செயலகங்கள் மட்டத்தில் 2,000 மெட்றிக் டொன்னையும் கொள்வனவு செய்ய முடிந்தது. 3 இலட்சம் மெட்றிக் டொன் நெல்லை அரசாங்கம் கையிருப்பில் வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அன்று 101 ரூபாவுக்கு விற்பனை செய்த நாட்டரிசியை இன்று 89 ரூபாவுக்கு விற்பனை செய்ய தனியார் துறையினர் முன்வந்துள்ளனர். இதற்கு தனியார் துறையினருடன் போட்டியிடுவதற்கு பெரும் தொகையான பணத்தை நெல் கொள்வனவுக்காக ஜனாதிபதி வழங்கியமையே காரணமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் இந்த வருட இறுதிக்குள் நாட்டின் தேவைக்கு மேலதிகமாக 6 மில்லியன் கிலோ அரிசி இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: