வன்னியில் பன்றிக் காய்ச்சல்! வன்னியில் மூன்று பேர் பாதிப்பு!

Saturday, February 11th, 2017

வன்னியில் பன்றிக் காய்ச்சல் நோய் காணப்படுவதாகவும் இதுவரை மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் கிளிநொச்சி சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டகச்சி சம்புக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானா மற்றும் மாங்குளம் பிரதேசத்தில் பெரியகுளம் ஆகிய பிரதேசங்களில் மூன்று சிறுவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் சுகாதார பிரினர் அறிவித்துள்ளனர்.

எனவே வெள்ளம் வரும் முன் அணைகட்டுவோம் எனக் கேட்டுக்கொண்டுள்ள சுகாதார பிரிவினர் கீழ் குறிப்பிடப்படும் நோய் அறிகுறிகள் காணப்படுகின்றவர்கள் உடனடியாக அரச வைத்தியசாலையை நாடி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி சுகாதார துறையினர் விடுத்துள்ள அறிவித்தலில்,

வைரசுக் காய்ச்சல் என்பது புதியநோய் அல்ல. காலத்துக் காலம் இவ்வாறான இன்ப்ளுவன்சா வைரஸ் காய்ச்சல் பரவுவதுண்டு.

சிலவேளைகளில் தாக்குதிறன் கூடிய வைரஸ் வகைகள் தொற்றும்போது கடுமையான விளைவுகள் மனிதருக்கு ஏற்படும்.

இலங்கையில் தற்போது H1N1என்ற வைரஸ் தாக்கத்தால் ஒருவகை காய்ச்சல் நோய் பரவிக்கொண்டு இருக்கிறது.

இது கர்ப்பிணித்தாய்மார், பிரசவத்தின் பின்னரான தாய்மார், இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், முட்டுவருத்தம், சலரோக வருத்தம் உடையவர்கள் ஆகியோரை தாக்கும் போது விளைவுகள் கடுமையாக இருக்கும்.

எனவே கர்ப்பகாலத்தில் இவ்வகை நோய்கள் ஏற்படும் போது மிகக்கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் இவ்வகை நோய்கள் ஏற்படும் போது மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும்.

உரிய சிகிச்சை இல்லையென்றால் இதன் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கலாம். இந்நோயை ஆரம்பத்தில் கண்டு பிடித்து சரியான சிகிச்சையை வழங்கினால் உரிய நேரத்தில் தேவையற்ற தாய் -சேய் உயிரிழப்பை தடுக்கலாம்.

கர்ப்பிணித் தாய்மாருக்கு இதய வருத்தம் ,முட்டு,சலரோகம் போன்ற நோய்கள் இருந்தால் இந்நோயின் தாக்கம் மிக அதிகம் இருக்கும்.

நோயின் அறிகுறிகளாக பின்வருவன காணப்படும் இடத்து உடனடியாக அரச வைத்தியசாலையை நாடி உரிய சிகிசை பெற்றுக்கொள்ளுமாறும் பொது மக்களை சுகாதார பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதாவது, சளிக்காய்ச்சல், தடிமன், தொண்டைப் புண், மூக்குச்சளி, தலையிடி, உடல் நோ என்பன காணப்படுவதோடு,

நோயின் அபாய அறிகுறிகளாக அதி கூடியகாய்ச்சல் ,மூச்சுவிடமுடியாமை,நெஞ்சுநோ, மறதிக்குணம், நெஞ்சுப்படபடப்பு, வலிப்பு, வயிற்றோட்டம் எனபனவும் காணப்படும் குறிப்பாக கர்ப்பவதிகள் சனங்கள் கூடும் இடங்கள், கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பேரூந்துப்பயணங்கள், புகையிரதப் பயணங்கள் மற்றும் இந்தநோயினால் பாதிப்புற்றோரைப் பராமரித்தல் என்பவற்றை இந்த நோய்பரவும் காலங்களில் தவிர்ப்பதால் இந்த நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

சாதாரண வைரசுக் காய்ச்சலிலிருந்து இந்த H1N1 வைரசுக் காய்ச்சலினை வேறு பிரித்து அறிவது கடினமாகும். தகுந்த ஆய்வு கூட மற்றும் நிபுணத்துவ சேவையும் விசேட வைத்திய நிபுணர்களது நேரடிக் கண்காணிப்புமே H1N1 வைரசுக் காய்ச்சலினை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு அவசியமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

swineflu_2285569f

Related posts: