வடக்கில் வீதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவிப்பு!

Saturday, March 30th, 2024

வடமாகாணத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டையும் வீதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் அதிக வாகன விபத்துக்கள் மற்றும் அதிக வாகன நெரிசல் உள்ள பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடுத்த சில வாரங்களில் அந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதை முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல், புதிய சாலை அடையாள பலகைகள் அமைத்தல், ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்களைக் குறைத்து, சீரான போக்குவரத்தையும், வீதி ஒழுங்கை பேணும் மாவட்டமாக வடமாகாணத்தை உருவாக்குவதே பொலிஸாரின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: