மிஹின் லங்காவை மூடுவதற்கு எதிராக ஊழியர்கள் போர்க்கொடி!

இலங்கையின் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான மிஹின் லங்கா விமான நிறுவனம் மூடப்படவுள்ளதாக விடுக்கப்பட்ட அறிவிப்பை அடுத்து கொழும்பிலுள்ள அதன் பிரதான காரியாலயத்தில் பதற்றநிலை ஏற்பட்டது.
மிஹின் லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் பிரதானிகள் இருவர், நிறுவனத்தின் ஊழியர்களினால் காரியாலயத்தில் தடுத்து வைக்கப்பட்டதனாலேயே இந்தப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மிஹின் லங்கா பிரதான காரியாலயத்தின் மனித வள முகாமையாளர், நிதி பொறுப்பாளர் மற்றும் நிருவாக பிரதான ஆகியோரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
எதிர்வரும் 30 ஆம் திகதி மஹின் லங்கா நிறுவனம் மூடப்பட்டு, ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைக்கப்படும் என்று அரசாங்கம் அண்மையில் அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.
இதனால், தமக்கு அங்கு தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவது குறித்தோ, நஷ்டஈடு பெற்றுத் தருவது தொடர்பிலோ இந்த அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க வில்லையென மிஹின் லங்கா ஊழியர்கள் கூறியுள்ளனர்.
தமது தொழிலுக்குரிய உத்தரவாதத்தை வழங்குமாறும் அல்லது தம்மை தொழிலிருந்து நீக்குவதாயின் தமக்கு நஷ்ட ஈட்டைப் பெற்றுத் தரும்படியும் இந்த ஊழியர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|