பரீட்சைக்கு முன்பாகவே வெளியானது வினாத்தாள் – விசாரணையை ஆரம்பித்தது வடக்குக் கல்வித் திணைக்களம்!
 Wednesday, November 9th, 2016
        
                    Wednesday, November 9th, 2016
            
வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்படும் 3அம் தவணைப் பரீட்சைக்கான வரலாற்றுப் பாட வினாத்தாள், குறித்த திகதிக்கு முன்பாகவே ஒரு பாடசாலையில் வெளியாகியுள்ளது. இதனால் வரலாற்றுப் பாடத்திற்கான புதிய வினாத்தாளை வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் புதிதாகத் தயாரித்து வழங்க மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் வினாத்தாள் வெளியாகியமை தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தரம் 11 வரலாற்றுப் பாடப் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் வரலாற்றுப் பாடப் பரீட்சை கடந்த 4ஆம் திகதி நடந்து முடிந்து விட்டது. இதனாலேயே இந்தச் சிக்கல் ஏற்பட்டது.
இது தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரனிடம் கேட்டபோது,
வரலாற்றுப் பாடப் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி சகல பாடசாலைகளிலும் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தத் தகவல் குறித்த பாடசாலை அதிபரைச் சென்றடையவில்லை. என்று தெரிவிக்கப்படுகின்றது. அது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறும் குறித்த பாடத்துக்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வினாத்தாள் நிராகரிக்கப்பட்டு, புதிய வினாத்தாள் தயாரிக்கப்படவுள்ளது. அந்த வினாத்தாள் எதிர்வரும் 15ஆம் திகதி மாணவர்களுக்குப் பரீட்சை எழுதுவதற்காக வழங்கப்படும் – என்றார்.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        