பக்திபூர்வமாக இடம்பெற்ற குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய இரதோற்சவம்

Wednesday, May 10th, 2017

யாழ். குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை(09) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

நேற்றுக் காலை-08.30 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து  அடியவர்களின் அரோகராக் கோஷத்துடன் அம்பாள் அழகிய பீடத்தில் மெல்ல மெல்ல அசைந்தாடி தேருக்கு எழுந்தருளினார்.

தொடர்ந்து சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டதைத் தொடர்ந்து முற்பகல்-10.30 மணியளவில் இரத பவனி ஆரம்பமாகியது.

ஆண் அடியவர்கள் ஒரு புறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் வடம் தொட்டிழுக்க ஆரம்பமான இரதோற்சவத்தில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆலய இரதோற்சவத்தில் ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணம், காவடிகள் என்பன எடுத்தும், பெண்கள் கற்பூரச் சட்டிகள் எடுத்தும் அடியளித்தும் நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.

இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த-01 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் நாளை புதன்கிழமை முற்பகல்-11 மணிக்குத் தீர்த்தோற்சவமும், இரவு கொடியிறக்க வைபவமும் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: