தமிழ்ச் சமூகத்தினை அழித்தொழிக்கவே போதைப்பொருள் பாவனை: சாடுகிறார் வடக்கு முதலமைச்சர்
Saturday, May 7th, 2016யுத்தத்திற்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம் கல்வி வலயம் முதன் நிலை பெற்றுள்ளது. மீண்டும் 2009 ஆம் ஆண்டு பின்னர் படிப்படியாக வளர்ச்சி அடைந்துவந்த போதிலும் இன்னும் முழுமையான நிலை அடையவில்லை. க.பொ.த சாதாரண தரத்தில் முதல் நிலை பெற்றாலும் இன்று நாம் அறிவு ரீதியாகப் பின்தங்கிய நிலையில் நிற்கின்றோம். இந் நிலை மாற்றப்படவேண்டும். அண்மைக் காலமாக எமது மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை மிகவும் வேதனை அளிக்கின்றது. யுத்தகாலத்தில் மிகவும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வந்த இந்தச் சமூகத்தில் யுத்தம் முடிந்த பின்னர் சமாதானத்தின் பின்னர் ஒழுக்கமற்ற ரீதியாகப் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பது மிகுந்த வருத்தத்தினைத் தருகின்றன. இந்தத் தமிழ்ச் சமூகத்தினை அழித்தொழிக்கவே இவ்வாறான போதைப்பொருள் பாவனை இடம்பெறுகிறது என எண்ணத் தோன்றுகின்றது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சு,மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் எற்பாட்டில் யாழ் .கல்வி வலயத்திற்குட்பட்ட 150 பாடசாலை ஆசிரியர்களுக்கான ” எதிர்கால மாணவர் களின் கல்வியும் வளமான சமூதாயமும் எனும் தொனிப்பொருளிலான ஆசிரியர் மாநாடு நேற்று வெள்ளிக் கிழமை(06-05-2016) யாழ் .வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் யாழ். கல்வி வலயப்பணிப்பாளர் ந.தெய்வேந்திரராஜா தலைமையில் நடைபெற்றது
குறித்த மாநாட்டில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கலந்துகொண்டு மாநாட்டினை உத்தியபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நான் ஒரு கல்வியாளன் அல்ல, ஆனால், மக்கள் மீது கரிசனை கொண்ட நான் ஒரு சாதாரண மனிதன். அன்பினால் ஆகாதது எதுவுமில்லை என்பது எனது வாதம். இனிவரும் காலத்தில் ஆசிரியர்களாகிய நீங்கள் அன்பு மிக்கவர்களாகக் கல்வியில் மேம்பட்டவர்களாக , கல்வியில் தேடிக் கற்கும் ஆற்றல் மிக்கவர்களாக எமது மாணவ,மாணவிகளை மாற்றி அமைக்க அல்லும்,பகலும் உழைக்கவேண்டும். வாண்மை விருத்திக்கு வித்திடும் மத்திய கல்வியின் ஒரு அங்கமாக இலங்கையில் 98 பாடசாலை வலயங்களில் உள்ள ஆசிரியர்களின் வாண்மையை விருத்திகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கல்வியில் தரம் மேம்பட்டுள்ள யாழ்ப்பாணத்தின் கல்வித் தரம் தற்போது கேள்விக் குறியாகவுள்ளது. இதில் சமயம் கற்றவர்களும் , சமயப் பற்றுயடையவர்களும், கலைஆர்வம் கொண்டவர்களும் கடமை வீரம் உடைந்து இந்தப் பூமியிலே இன்று கல்விக்கு, சமயத்துக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கலையில்,கடமையில் வஞ்சம். சுயநலத்தில் தஞ்சம் அடைந்துள்ளோம். எமது இளைஞர்கள் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். புகழ் பூத்த பாடசாலைகளிலும் இவ்வாறான சம்வங்கள் இடம்பெறுகின்றன.
எமது எதிர்கால மாணவ சந்ததியினையும், சமூகத்தினையும் ஒரு கற்ற பண்புடைய சமூகமாக உருவாக்கவேண்டியது உங்களுடைய(ஆசிரியர்களுடைய) கைகளில் இருக்கின்றது. இன்று எமது மாணவ,மாணவிகள் மாத்திரமல்லாமல் எமது அலுவலர்கள் கூட ஆங்கிலத்தில் எழுதுவது பிழையுடன் எழுதுகின்றார்கள். எமது ஆசிரியர் சமூகம், மாணவர்கள் சமூகம் மும்மொழி பாண்டித்துவம் பெறவேண்டும். தெற்கில் சிங்கள மாணவர்களும் தழிழ் மொழியினைக் கற்க ஆரம்பித்துவிட்டார்கள்.
குறித்த மாநாட்டின் பின்னர் ஆசிரியர்களின் கற்றல் செயற்பாட்டிலும் மாணவர்களின் கல்வி வளத்திலும் பாரிய மாற்றம் உண்டாக வேண்டும். இம் மாற்றத்தின் பின்னர் கல்வியின் மாற்றத்தின் ஒரு அங்கமாக அவர்களின் பல்துறை ஆற்றல்களும் மேம்படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|