டெங்கு நோயால் 60 பேர் பாதிப்பு – கட்டுப்படுத்த பருத்தித்துறையில் தீவிர நடவடிக்கை!

Friday, June 22nd, 2018

பருத்தித்துறை நகர சபைப் பகுதியில் நகரம் உட்பட 4 கிராம அலுவலர் பிரிவுகளில் டெங்கு தீவிரமாக உள்ளது. அதனால் 3 நாள்களாக டெங்கு ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

கரையோரத்தை அண்டியுள்ள ஜே.403, ஜே.401, ஜே.404, ஜே.407 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் இந்த மாத ஆரம்பத்தில் டெங்கின் தாக்கம் இனங்காணப்பட்டது. குடாநாட்டில் எங்கும் இல்லாதவாறு டெங்கு அதிகரித்து இதுவரை 60 பேர் டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளானார்கள். கடந்த வாரம் இதன் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.

டெங்குத் தாக்கத்தை கட்டுப்படுத்த பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினர், பருத்தித்துறை நகரசபை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவினர் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். நகர சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு உழவு இயந்திரங்கள், ஜே.சி.பி. வாகனங்கள் மூலம் கிராமங்களையும் கரையோரப் பகுதிகளையும் சுத்தம் செய்து வருகின்றனர்.

கிணறுகள், தண்ணீர்த் தொட்டிகளில் பெருமளவில் குடம்பிகள் காணப்பட்டுள்ளன. பொதுமக்கள் நுளம்புகள் பெருகாமல் பாதுகாத்துக் கொள்வதுடன் நுளம்பு வலைகளைப் பயன்படுத்துமாறும் பருத்தித்துறைச் சுகாதார மருத்துவ அதிகாரி பொதுமக்களைக் கோரியுள்ளார்.

Related posts: