டெங்குக் காய்ச்சலால் கிண்ணியாவில் உயிரிழப்பு அதிகரிப்பு!

Tuesday, March 14th, 2017

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வைத்தியசாலையை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கிண்ணியாவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான பாறூக் கனீஷா (வயது 58), மற்றும் ரஸீன் சாஹீரா (வயது 26) ஆகிய இருவரும் நேற்று உயிரிழந்ததாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, கிண்ணியாவில் டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளதாகக் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் அஜீத் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில், ஏனைய சில பிரதேசங்களிலும் டெங்கு காய்ச்சல் நோயாளர்கள் இனம் காணப்பட்டிருந்தாலும் கிண்ணியா பிரதேசத்தில் நிலைமை மோசமாகக் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசத்தில் மட்டும் சுமார் 1500க்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்தவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில், நுளம்புகளை ஒழிப்பதற்கும், கழிவுகளை அகற்றுவதற்கும் சுகாதார துறையினரால் சிறப்பு செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Related posts: