சுவாச அடைப்பு நோய் குறித்து விழிப்புணர்வு அவசியம்!
Wednesday, November 16th, 2016
நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் குறித்த அறியாமையின் நிமித்தமும் அதன் தாக்கத்தினாலும் பாதிக்கப்படுவோரின் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பந்து குணசேன தெரிவித்துள்ளார்.
நாட்பட்ட சுவாச அடைப்பு நோயானது ஒருவகையான இடையூறு செய்கின்ற நுரையீரல் நோயாகும். குறிப்பாக தடையை ஏற்படுத்துகின்ற சுவாசத்தையே குறிக்கின்றது. சாதாரணமாக நாட்படும் போது இது மேலும் மோசமான நிலையினை அடைகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதிகரித்துவரும் சுவாச நோய்கள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை குடும்ப சுகாதார பணியகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நோய்களிலிருந்து விடுதலைபெற்ற நாடாக இலங்கையை மாற்றியமைக்கும் நோக்குடன் அண்மைக் காலமாக அரசு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அத்துடன் தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் குறித்தும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுவருகின்றது.
நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் ஆரம்ப காலங்களில் பாதி ப்பை ஏற்படுத்தும் நோய்களின் வரிசையில் 20 ஆவது இடத்தில் இருந்தாலும் தற்போதைய நிலையில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. அதுமாத்திரமன்றி, 2020 ஆம் ஆண்டில் இரண்டாம் நிலைக்கு வருவதற்கும் வாய்ப்புள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் சுவாச நோய்கள் தொடர்பாக மக்களிடையே தெளிவற்ற நிலையே காணப்படுகின்றது. ஆகையால் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
இந்நோய்க்கான பிரதான அறிகுறிகள் எனும் போது சுவாசிப்பது மிகுதியாகுதல், வேகமான இதயத் துடிப்பு, அதிகமாக வியர்த்தல், கழுத்து தசைகளின் தோல்நிறம் மாற்றமடைதல், மூச்சுத் திணறல், இருமல், சளி என்பன முக்கியமான அறிகுறிகளாகும்.
இந்நோயினை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் பட்சத்தில் பாதிப்புகளை இயன்றளவு குறைத்துக்கொள்ள முடியும்.
நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சிக்கான முதல்நிலை காரணமாக புகைத்தல் உள்ளது. அத்துடன் அதிகமாக புகைத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் போது நோயின் நிலை மேலும் தீவிரமடைகின்றமையும் எடுத்துக்காட்டத்தக்கது.
வேலைத்தலங்களில் உள்ள செறிவூட்டும் தூசு, இரசாயனங்கள் புகை, இவைகளுடன் நீண்ட நாள் தொடர்பிலிருந்தால் புகைப்பிடிப்பவராயினும் அல்லாதாவராயினும் இந்நோய் வருதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். புறநகர்ப் பகுதி காற்று மாசும் இதற்கு மிக முக்கிய காரணியாகும்.
கிராமப்பகுதிகளை விட நகர்ப் புறங்களில் காற்று மாசு அதிகம் என்பதால் நகர்ப் புற மக்களே பெரும்பான்மையாக இந்நோய்க்குட்படுகின்றனர் என்பதால் ஒவ்வொருவரும் அறிகுறிகள் தென் படும் போதே அதனை உரிய வைத்தியரிடம் காண்பித்து சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்துடனான சமூக மொன்றை கட்டியெழுப்ப முடியும் என்றார்.
எல்லாவகையான நோய்களுக்கும் அறியாமையும் ஒரு காரணம் என்பதால் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு மக்களி டையே சரியான முறையில் சென்றடைய வேண்டிய தேவை யுள்ளது எனவும் குறிப்பிட்டார்
Related posts:
|
|
|


