சாட்சியின் பாதுகாப்பு கருதி சந்தேகநபரின் பிணை இரத்து!

Saturday, August 20th, 2016

நீர்வேலி மேற்கில் கடந்த 2011ஆம் ஆண்டு சகோதரியையும், மைத்துனரையும் கொலை செய்ததுடன் மருமகனைக் காயப்படுத்தி கொலைசெய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சாட்சியமளிப்பதற்காக கனடாவில் இருந்து வந்தவர் பாதுகாப்பு கோரியதையடுத்து, கொல்லப்பட்டவர்களின் மகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பிணையில் சென்றிருந்த எதிரியை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்க்கண்டு உதயகுமார் என்பவரையும்,அவருடைய மனைவியாகிய உதயகுமார் வசந்திமாலா என்பவரையும் கொலை செய்தததுடன்,அவர்களின் மகனான உதயகுமார் குகதீபனைக் காயப்படுத்தி, அவர் மீது கொலை முயற்சிமேற்கொள்ளப்பட்டதாக, குணா என்றழைக்கப்படும் அருணாசலம் குகனேஸ்வரன் என்பவருக்குஎதிராக சட்டமா அதிபரினால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.

இரண்டு கொலைகளைச் செய்து ஒரு கொலை முயற்சியில் ஈடுபட்டதாக எதிரிக்கு எதிராகக்குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்ற இந்த வழக்கு எதிர்வ ரும்29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தக் கொலை வழக்கின் முக்கிய சாட்சியாகிய கொல்லப்பட்டவர்களின்மகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்காக கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.

மேல் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவர் 18ம் திகதி வியாழன்று யாழ் மேல் நீதிமன்றத்திற்குச் சென்று இந்தக் கொலை வழக்கில் சாட்சி யமளிப்பதற்காக கனடாவில் இருந்து வந்துள்ளதாகவும், தனக்கு இதனால் உயிரச்சுறுத்தல் இருப்பதாகவும் மேல் நீதிமன்றத்தின் விடுமுறைக்காலம் முடிவடைந்து வழக்கில் சாட்சியமளித்து விட்டு கனடாவுக்குத் திரும்பும் வரையில் தனக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று முறையீட்டு கோரிக்கை ஒன்றை மேல் நீதிமன்ற நீதிபதிக்கு முன்வைத்தார்.

இதனையடுத்து, சாட்சிகள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தைப் பயன்படுத்தி சாட்சிகள் சுதந்திரமாக சாட்சியமளிப்பதற்கும், அச்சுறுத்தல் இல்லாமல் சாட்சியமளிப்பதற்கும் ஏதுவாக ஏற்கனவே எதிரிக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை இடை நிறுத்தி உடனடியாக அவரைக் கைது செய்யுமாறு கோப்பாய் பொலிசாருக்கு யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கமைய வெள்ளியன்று இந்த வழக்கின் எதிரியாகிய குணா என்றழைக்கப்படும் அருணாசலம் குகனேஸ்வரனை கோப்பாய் பொலிசார் கைது செய்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தினர். அப்போது அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்போது நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது:

இந்த வழக்கில் முக்கிய சாட்சியமளிப்பதற்காக கனடாவில் இருந்து வந்துள்ள சாட்சிக்கு அச்சுறுத்தல் உள்ளது. சாட்சி என்ற வகையில் அவரைப் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும்.

அதேவேளை, அந்த சாட்சிக்கு எதுவிதமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும், அல்லது பாதிப்பு ஏற்படுத்தப்பட்டாலும், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்ற எதிரி மீதே அதற்காகக் குற்றம் சுமத்தப்படும்.

அத்துடன், இந்த வழக்கில் எதிரிக்கும் சுதந்திரமான நியாயமான விசாரணை கிடைக்க வேண்டும் என்ற அனைத்து விடயங்களையும் கவனத்தில் எடுத்தே இந்த நீதிமன்றம் ஏற்கனவே எதிரிக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை இடைநிறுத்தி, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுகின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.

நீதிபதியின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த எதிரி, எதுவிதமான பிரச்சினையும் இல்லாமல் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வதற்காக நீதிமன்றத்தின் இந்த விளக்க மறியல் உத்தரவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கின் எதிரியை சிறைச்சாலை அதிகாரிகள் விளக்க மறியற்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

Related posts: