சத்திரசிகிச்சையின் போது கட்டில் உடைந்து வீழ்ந்ததால் மருத்துவருக்குக் காயம்!

Saturday, May 12th, 2018

காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் சத்திர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த போது நோயாளி படுத்திருந்த கட்டில் உடைந்து வீழ்ந்து மருத்துவர் ஒருவரின் கால்விரலில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது.

கராப்பிட்டிய மருத்துவமனையின் சத்திர சிகிச்சை நிபுணர் ரஜித அபேவிக்கிரமவே இவ்வாறு காயமுற்றுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் வயிற்றுப் பகுதியில் இருந்த கட்டியை வெட்டி அகற்றிவிட்டு தையல் போட்டுக் கொண்டிருக்கும் போதே நோயாளிபடுத்திருந்த கட்டிலின் கீழ் தாங்கி நிற்கும் இரும்புப் பகுதி உடைந்து கட்டில் நிலத்தோடு வீழ்ந்துள்ளது.

ஆயிரம் கிலோ எடைகொண்ட கட்டில் மருத்துவரின் காலின் மீது வீழ்ந்ததில் அவரது கால் பெருவிரல் முற்றாக நசிந்து பெரும் காயமேற்பட்டுள்ளது.

எனினும் நோயாளிக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து அவருக்கு ஒன்றரை மணிநேர பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையொன்றை மேற்கொள்ளவேண்டியேற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் சத்திர சிகிச்சை மருத்துவ வரலாற்றில் இதுபோன்று சத்திர சிகிச்சைக் கட்டில் உடைந்து வீழ்ந்த சம்பவம் இதுவே முதற்தடவையாகும். இச்சம்பவம் உலகளவில்வெகுஅபூர்வமாகவே நடைபெறும்.

Related posts: