சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன்பாக மீனவ சங்கங்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்!

Friday, March 15th, 2024

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களின் இழுவை மடிப்படகுகளை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன்பாக மீனவ சங்கங்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தில் நேற்றையதினம் (14)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழ் மாவட்ட கடத்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட கடற்பரப்பில் இந்திய ஆத்துமீறிய மீன்பிடியாளர்களின் வருகை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

அவர்கள் எமது வாழ்வாதாரத்தையும் தொழிலையும் தொடர்ச்சியாக அழித்து வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திடமும் இந்திய அரசாங்கத்திடமும் எமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அண்மையில் இந்திய சட்டவிரோத மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி இலங்கை கடல் எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். யாழ் இந்திய துணைத் தூதரகத்திடம் மகஜர் கையளித்தும் இதுவரை பயன் ஏதும் ஏற்படவில்லை.

இவ்வாறான நிலையில், எதிர்வரும் 19 ஆம் திகதி யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு முன்பாக தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் தமது போராட்டத்திற்கு ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழில் அமைப்புக்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: