கோப்பாய் சாலை விபத்தில் வைத்தியர் உயிரிழப்பு!

Tuesday, August 30th, 2016

கோப்பாய் சந்தியில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக நேற்று (29) இரவு இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.கஹந்தவெல தெரிவித்துள்ளார்.

கரவெட்டி, கிழவன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா செந்துருவன் (வயது 37) என்பவரே உயிரிழந்தார். இரவுக் கடமை நிமித்தம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த மேற்படி வைத்தியர், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பிவிட்டு பிரதான வீதிக்கு நுழைய முற்பட்டுள்ளார்.

இதேநேரம் யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரு தனியார் பேருந்துகள் ஒன்றினை ஒன்று முந்திச் செல்ல போட்டி போட்டு ஓடிச் சென்றன. இதில் ஒரு பேருந்து வீதியின் அருகில் நின்றிருந்த வைத்தியரை மோதிவிட்டுச் சென்றது.

அப்பகுதியில் நின்ற பொதுமக்கள், காயமடைந்த வைத்தியரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர். எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறினர்.

விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி மற்றும் நடத்துனர் தப்பிச் சென்றுள்ளனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொறுப்பதிகாரி கூறினார்.

Related posts: