கிளிநொச்சியில் 80 ஹெக்டேயரில் உபவுணவுச் செய்கை – மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர்!

Friday, October 27th, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 873 ஹெக்டேயரில் உப உணவுச்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள போதும் தற்போதைய வரட்சியால் 80 ஹெக்டேயர் வரையான நிலப்பரப்பிலேயே உப உணவுச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் பி.உகநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் அதிகமான மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். கூடுதலான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற போதும் உப உணவுச் செய்கை மற்றும் தோட்டச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவது குறைந்து வருகின்றது.

இந் நிலையில் இவற்றை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களின் நிதியொதுக்கீடுகளில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறான உபஉணவுச் செய்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 2873 ஹெக்டேயரில் இம்முறை உபஉணவுச் செய்கை எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து நிலவுகின்ற வரட்சி காரணமாக 80 ஹெக்டேயரில் மாத்திரம் செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக நிலக்கடலை, எள்ளு, பயறு போன்ற பயிர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை 557 ஹெக்டேயரில் மிளகாய் செய்கையும் எதிர்பார்க்கப்படுகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாரிய நீர்ப்பாசனைக் குளங்களின் கீழ் 13 ஆயிரத்து 169 ஹெக்டேயர் நிலப்பரப்பிலும் சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் 540 ஹெக்டேயரிலும் மானா வாரியாக 10 ஆயிரத்து 800 ஹெக்டெயரிலும் என 24 ஆயிரத்து 509 ஹெக்டேயரில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: