காணாமல் போனோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் குறித்த இடங்களை சோதனை செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கும் – ஜனாதிபதி
Monday, May 22nd, 2017காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து, எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை சோதனை செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் விதந்துரைகளை கருத்திலெடுத்து காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழு விரைவில் நியமிக்கப்படுமெனவும் ஜனாதிபதி கூறினார்.
சம்பூர் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இநத விடயங்களை குறிப்பிட்டார்.
2015 ஆண்டில் தான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ மாணவியருடன் தோன்றும் புகைப்படத்தை இணையத்தளங்களில் வெளியிட்டு தன்னுடன் இருந்த இந்த பிள்ளை காணாமல் போயுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் பிற்போக்குவாதிகளின் அரசியல் சதியாகுமெனவும், அவ்வாறான காணாமல் போதல் இடம்பெற்றிருந்தால் அந்த பிள்ளைகளை தேடுவதற்காக தானும் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்ய இருந்ததாகவும், தன்னை வர விட முடியாதென வடக்கில் எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி;, அன்றைய தினம் தான் அவ்வாறு விஜயம் மேற்கொள்வதாக இருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பெற்ற சுதந்திரம் மற்றும் சமாதானத்தின் பெறுமதியை புரிந்துகொண்டு அனைவரும் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, பெற்ற சமாதானத்தை மக்களை தவறாக வழிநடத்தி சீர்குலைக்க முன்னெடுக்கப்படும் பிற்போக்குவாதிகளின் சதிகளை தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டுமெனவும் கூறினார்.
அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டதன் பின்னர், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தான் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
தெற்கைப் போன்றே வடக்கிலும் அபிவிருத்தியை தான் தாமதப்படுத்தவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி , பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்து, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த அனைத்து அரசியல் தலைவர்களும் பாடுபட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, நவரத்தினபுரம், கூனித்தீவு, கடற்கரைச்சேனை ஆகிய ஐந்து கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள 4253 மக்களுக்கு சேவையாற்றுவதற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சம்பூர் மாவட்ட மருத்துவமனை இன்று முற்பகல் ஜனாதிபதியினால் மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது.56 மில்லியன் ருபா செலவில் அனைத்து வசதிகளுடனும் இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நினைவு படிகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி . மருத்துவமனையையும் பார்வையிட்டார். மருத்துவனையில் முதலாவதாக அனுமதிக்கப்பட்ட நோயாளியையும் ஜனாதிபதி பதிவு செய்தார்.
Related posts:
|
|