கடற்படையினர் நிர்மாணித்துள்ள நூறாவது நீர் சுத்திகரிப்பு நிலையம் கையளிப்பு!
Tuesday, January 17th, 2017யாழ் பொலிஸ் நிலையம் மற்றும் பதவிய ஊராவ கிராமத்தில் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட நூறாவது நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உறேவ கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நீர்சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் அக்கிராமத்தைச் சூழவுள்ள 60 குடும்பங்கள் தூய குடிநீரினை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
அதேவேளை யாழ் பொலிஸ் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள நீர்சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் அப்பொலிஸ் நிலையத்தில் உள்ள 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நன்மையடையவுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இத்திட்டம் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் பொலிஸ் தலையகம் ஆகியவற்றின் நிதி அனுசரணையின் கீழ் முன்னெடுக்கப்பட்டன.நாட்டு மக்களுக்கு தூய குடிநீரினை பெற்றுக்கொடுக்கும் இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டத்தின்கீழ் இதுவரை நாடு பூராகவும் 100 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 46,070 குடும்பங்கள் மற்றும் 40,350 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர்.
விவசாய சமூகங்கள் மத்தியில் ஏற்படுகின்ற சிறுநீரக நோய்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி நிறுவப்பட்டு வரும் இத்திட்டத்திற்காக இலங்கை கடற்படை வீரர்கள் மாதாந்தம் 75 ரூபா பங்களிப்பு செய்கின்ற அதேவேளை, சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன தமது காத்திரமான பங்களிப்பினை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|