உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக காத்திருக்கும் 400 இற்கும் மேற்பட்ட அரச உயர் அதிகாரிகள்!
Thursday, November 24th, 2016
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 400 இற்கும் மேற்பட்ட அரச உயர் அதிகாரிகள், கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்றுக் கொள்வதற்கான இருப்பு பட்டியலில் காத்திருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசிடம் 107 உத்தியோகபூர்வ இல்லங்கள் மாத்திரமே காணப்படுவதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக இருப்பு பட்டியலில் காத்திருக்கும் அனைவருக்கும் உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்றுக் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய சிரேஷ்ட அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குவதற்கான வீட்டுத் திட்டம் தொடர்பான பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கான உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படாமை குறித்தும் அமைச்சின் செயலாளரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
எதிர்கட்சி தலைவருக்கு மூன்று உத்தியோகபூர்வ இல்லங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவற்றினை அவர் நிராகரித்துள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.மேலும், விலை மனுக் கோரலின் அடிப்படையில் தனியார் இல்லங்கள் சிலவற்றையும் எதிர்கட்சி தலைவருக்கு பெற்று கொடுப்பதற்கு தயாராகிய போதும் அவற்றையும் இரா.சம்பந்தன் நிராகரித்ததாகவும் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


