உடையார்கட்டுக் குளத்திலிருந்து நீர்ப்பாசன வசதிகளை உருவாக்க கோரிக்கை!
Tuesday, October 25th, 2016
முல்லைத்தீவு மாவட்ட முத்தையன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட உடையார்கட்டுக் குளத்திலிருந்து வள்ளுவர்புரம், இளங்கோபுரம், தேராவில், மாணிக்கபுரம் ஆகிய கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை உருவாக்கித் தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. அங்கு நீர்ப்பாசன வசதி இல்லாததால் சிறுபோக விவசாய முயற்சிகள் மேற்கொள்ள முடிவதில்லை.
விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதால் நாம் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். உடையார்கட்டுக் குளத்திலிருந்து மேற்படி கிராமங்களுக்கான நீர்ப்பாசன வசதியை உருவாக்குவதன் மூலம் இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்று கிராம மக்கள் தெரிவித்தனர். உடையார்கட்டுக் குள நீர்பாசனத்தை மேற்கோள்ளும் திட்டத்தின் கீழ் வள்ளுவர்புரம், இளங்கோபுரம், தேராவில், மாணிக்கபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளடங்கவில்லை. குளத்தில் போதிய நீர் இருக்கும் போதும் கூட மேலதிக இடங்களுக்கு நீர் வழங்க முடியாது – என்று முத்தையன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் தெரிவித்தார்.
Related posts:
|
|