உடலில் தீப்பிடித்த இளம் குடும்பப் பெண் ஏழு நாட்களின் பின் உயிரிழப்பு!

வீட்டு கழிவுப் பொருட்களை ஒரு பகுதியில் ஒதுக்கித் தீவைத்த இளம் குடும்பப் பெண்ணின் கவனயீனத்தினால் உடலில் தீப்பற்றிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏழு நாட்களின் பின் நேற்று (12-) உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இடம்பெயர்ந்த நிலையில் வலிகாமம் வடக்கு மக்கள் தங்கியிருக்கும் சபாபதிப்பிள்ளை முகாமில் தற்காலிகமாக வசித்து வந்த மேற்படி பெண் கடந்த-5 ஆம் திகதி குப்பை கொழுத்திவிட்டு அருகில் இருந்த தண்ணீர்த் தாங்கியில் மண்ணெண்ணைப் போத்தலை வைத்துள்ளார்.
இந்த நிலையில் மண்ணெண்ணைப் போத்தல் காற்றினால் குறித்த பெண்ணின் உடலில் விழுந்த நிலையில் உடலில் தீ பற்றிக் கொண்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் தீயை அணைப்பதற்கும் வீட்டில் ஒருவரும் இல்லாத நிலையில் தீ உடல் முழுவதுமாகப் பரவியுள்ளது. இந்த நிலையில் தீக்காயங்களுடன் குறித்த பெண்மணியை அயலவர்கள் மீட்டுத் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அதனைத் தொடந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண்மணி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த முகாமில் வசித்து வந்த பிரபாகரன் அஸ்ரினா (வயது-23) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மேற்படி பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகளை யாழ். போதான வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதையடுத்துச் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|