இலங்கையில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை – விரைவில் சட்டமாக்கப்படும் என நீதியமைச்சர் அறிவிப்பு!

Friday, February 26th, 2021

இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்படவுள்ளதுடன் இது தொடர்பான யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் –

இதற்கான யோசனை கடந்த நவம்பர் மாதம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. ஒரு சமூகத்தை மாத்திரம் இலக்குவைத்து அல்லாமல் பொதுவாக தேசிய பாதுகாப்பு கருதி பொது இடங்களில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புர்கா தடை என்றும் இது கூறப்படுகிறது. அதே நேரத்தில் முஸ்லிம் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் படிப்படியாக எடுத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்விடயங்களை ஒரே தடவையில் மாற்ற முடியாது. அதற்கான படிமுறைகள் இருக்கின்றன அந்த படிமுறைகளின் அடிப்படையில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக முஸ்லிம் விவாக சட்டத்தில் பெண் ஒருவர் திருமணம் முடிப்பதற்கான குறைந்த வயது எல்லை 18 ஆக திருத்தப்படவுள்ளது.

அத்துடன் விவாக ஆவணத்தில் பெண்களும் கைச்சாதிட அனுமதிக்கப்படுவதுடன், ஆண்கள் அனுபவிக்கின்ற சகல உரிமைகளையும் பெண்களுக்கும் வழங்க இந்த திருத்தத்தின் ஊடக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: