இலங்கைக்கான கனடா வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் குருநகர் சுற்றுலாப் பயிற்சி மையத்திற்கு விஜயம்!
Saturday, July 30th, 2016
யாழ். குருநகர் பகுதியில் கனடா நாட்டு நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயிற்சி நிலைய மையத்திற்கு இலங்கைக்கான கனடா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் தலைமையிலான குழுவினர் விஜயமொன்றை மேற்கொண்டனர்.
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள குறித்த குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை(29-07-2016) யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டனர். இவர்கள் வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன் ஒரு கட்டமாக யாழ். மாவட்டத்தில் வேலைவாய்ப்பில்லாதவர்களுக்குத் தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட சுற்றுலாப் பயிற்சி நிலைய மையத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையுற்றதுடன் அங்குள்ள மாணவர்களுடனும் கலந்துரையாடினார். பின்னர் கனேடிய அரசாங்கத்தினால் யாழ். மாவட்டத்தில் புதிய தொழில் பயிற்சி நிலையங்களை அமைப்பது தொடர்பிலும் துறைசார்ந்த அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் போது இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் ஷேலி விட்டின், கனேடிய அமைச்சின் உயரதிகாரிகள், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், துறைசார்ந்த அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
Related posts:
|
|