ஆடிச் செவ்வாயால் ஒத்திவைக்கப்பட்ட வடமாகாண சபை!
Tuesday, August 9th, 2016
உறுப்பினர்களில் சிலர் ஆடிச் செவ்வாய் விரதம் இருந்தமையால், அவர்களுக்காக வடமாகாண சபையை தொடர்ந்து நடத்தாமல் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஒத்திவைத்துள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற போதே, இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
வடமாகாண அமைச்சர்களின் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு குழு ஒன்று அமைப்பது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்ட பிரேரணை, வடமாகாண சபையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும், அந்தக் குழுவை அமைப்பதற்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பையும், பல உறுப்பினர்கள் ஆதரவையும் தெரிவித்தனர்.தான் ஆடிச் செவ்வாய் விரதம் என்றும், இது தொடர்பான விவாதத்தை தொடர்ந்து நடத்தினால் மதியச் சாப்பாடு சாப்பிடமுடியாது என உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.
ஆனால் அவையை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைத்து செலவுகளை கூட்டாமல், இன்றே இது தொடர்பில் விவாதியுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்தார்.
இருந்தும் விவாதத்தை மேற்கொண்டு செல்லாமலும், ஆடிவிரதத்தைக் கருத்திற்கொண்டும் பிரேரணை சபையில் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Related posts:
|
|