அம்மன் அழைத்ததாக கூறி அறுபதடி கிணற்றுக்குள் இறங்கிய பூசாரி பரிதாப பலி !
Thursday, October 13th, 2016
ஆலய பொங்கல் விழாவில் அம்மன் அழைப்பதாக 60 அடிக் கிணற்றுக்கு இறங்கிய பூசாரி உயிரிழந்த சம்பவம் வறுத்தலை விளான் பகுதியில் இடம்பெற்றது. வறுத்தலைவிளான் அன்னம்மாள் ஆலயத்தின் பொங்கல் விழா நேற்று இடம்பெற்றது. இதன்போது குறித்த ஆலயத்தின் பூசாரி கலை ஆடியுள்ளார். கலையாடிய பூசாரி திடிரென ஆலயத்தின் அருகில் இருக்கும் 60 அடி கிணற்றுக்குள் இறங்க முயற்சி செய்துள்ளார். இதன்போது பக்தர்கள் மறித்த போதும் தன்னை அம்மன் அழைப்பதாக கூறி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். தெய்வம் பூசாரியின் உடம்பில் இருப்பதாக நம்பிய பக்தர்களும் பயம் காரணமாக பூசாரியைத் தடுக்கவில்லை.
கிணற்றுக்குள் இறங்கிய பூசாரி நீண்ட நேரமாகியும் வராததால் சில பக்தர்கள் அவரைக் காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்க முயற்சித்த போதும் முடியாததால் யாழ்ப்பாணம் தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற தீ அணைப்பு வீரர்கள் உள்ளே இறங்க முற்பட்டபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலினால் தீ அணைப்பு வீரர்கள் இடை நடுவில் மேலே வந்துள்ளனர். இதனையடுத்து காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸாருடாக கடற்படையினர் வரவழைக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கடற்படையின் நீர்முழ்கி வீரர்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டது.இச் சம்பவத்தில் கிழக்கு காரைக்குடியைச் சேர்ந்த இராசன் எதயபாலு (வயது 44) என்பவரே உயிரிழந்தவராவார். மீட்கப்பட்டவரின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. மரண விசாரணையை நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
Related posts:
|
|