அனைத்து அரச அலுவலகங்களுக்கு உட்பட்ட காணிகளில் உணவுப்பயிர்களை பயிரிடுங்கள் – கிழக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை!
Saturday, June 18th, 2022
திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து அரச அலுவலகங்களுக்கு உட்பட்ட காணிகளில் உணவுப்பயிர்களை பயிரிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் திணைக்கள தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள ஆகியோரின் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம இதன் போது கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டம் பல வளங்களை கொண்ட மாவட்டமாக காணப்படுகின்றது. அத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. சுற்றுலாவுக்கு பிரசித்தமான பல இடங்களும் இங்கு உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
மாவட்டத்தின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
ஆக்கபூர்வமான முன்மொழிவுகளுக்கு காணிகளை விடுவிக்கும் போது மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்குமாறும் பல காணிகள் வெவ்வேறு வேலைத்திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டபோதும் அவை வெற்று நிலங்களாக இருப்பதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல தெரிவித்துள்ளார்.
காணி, கல்வி, விவசாயம், மீன்பிடி, வீட்டுத்தோட்டம், பொதுவான பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


