யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே அன்றி அதை நாம் வலிந்து கையிலெடுக்கவில்லை – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, March 1st, 2019

கடந்த காலத்தில் யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே தவிர அதை எமது இனம் திட்டமிட்டு மேற்கொண்டதாக எவரும் கூறிவிட முடியாது. ஆனாலும் அந்த போராட்டத்தை இதர தமிழ் தரப்பினர் தீர்வுக்கான சந்தர்ப்பங்கள் கனிந்துவந்திருந்த சந்தர்ப்பங்களிலும் கைவிடாது தொடர்ந்தும் முன்னெடுத்து போராட்டத்தை தவறான வழிமுறைகளூடாக முன்னெடுத்தமையே தமிழ் மக்களது இந்த அவலங்களுக்கும் துயரங்களுக்கும் காரணம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தமிழ் மக்களது அரசியல் அதிகாரங்களை பெற்றவர்களால் எமது மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் என்றோ தீர்வுகண்டிருக்க முடியும். ஆனால் அதை கடந்தகாலங்களில் தத்தமது சுயநலன்கள் சார்ந்ததாக தமிழ் அரசியல் தலைமைகள் மாற்றிக் கொண்டமையால்தான் அவை தீரா பிரச்சினைகளாக இன்றுவரை நீடித்து வருகின்றது.

எமது கட்சிக்கு தமிழ் மக்கள் வழங்கும் அரசியல் அதிகாரங்கள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களுக்கானதாகவே இருந்திருக்கின்றது. கடந்த காலங்களில் எமக்கு கிடைத்த சொற்ப அதிகாரங்களைக் கொண்டே எத்தனையோ பல விடயங்களை மக்களுக்காக சாதித்துக் காட்டியிருக்கின்றோம்.  

ஆனால் அந்த அதிகாரங்கள் எமக்கு அதிகளவான பலமானதாக இருந்திருக்குமேயானால் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் அரசியல் மற்றும் அபிவிருத்தி சார் பிரச்சினைகளுக்கான தீர்களை என்றோ பெற்றுத் தந்திருப்பேன்.

தமிழ் மக்கள் தமது அரசியல் அதிகாரங்களை யாரிடம் கொடுத்தால் தமது எதிர்காலம் நிரந்தரமாக உறுதிமிக்கதாக அமையும் என்பதில் தெளிவு பிறந்துள்ளதை காணமுடிகின்றது. இந்த தெரிவு இம்முறை எமக்கானதாக அமையப்பெறும் என்ற நம்பிக்கையும் எமக்கு உண்டு.

தற்போது நாட்டில் ஏதோ ஒரு தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள்  தென்படுவதால் இதர தமிழ் அரசியல் தரப்பினரும் வெற்றுக் கேசங்களுடன் போலித் தேசியம் பேசியபடி மறுபடியும் தமிழ் மக்களை ஏமாற்ற ஆரம்பித்துவிட்டனர். 

அத்தகைய ஒரு அரசியல் பலத்தை தமிழ் மக்கள் எமக்கு இம்முறை வழங்குவார்களேயானால் ஒருபோதும் நாம் தென்னிலங்கை அரசுகளை குறை கூறவோ அன்றி அதிகாரங்கள் கிடையாது என்றும் வெற்று கதைகள் பேசி கிடைத்த சந்தர்ப்பத்தை வீணடித்துக்கொண்டிருக்கவோ போவதில்லை.

நிச்சயமாக மக்களால் எமக்கு வழங்கப்படும் அந்த அதிகரித்த அதிகாரங்களை கொண்டு கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் அனைத்தையும் எமது மக்களுக்கானதாக மாற்றியமைத்து தீரா பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மிகவிரைவில் பெற்றுத் தருவோம் என்றார்.

இச்சந்திப்பின்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.

Related posts:


இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளைக் கேட்பது என்பது எமது இன உரிமையை அடகு வைப்பதல்ல - நாடாளுமன்ற...
கட்சியின் நிர்வாக கட்டமைப்புகள் வட்டார ரீதியில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் - கட்சியின் செயற்பாட...
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...