சுயநலம் கொண்ட காணாமல் போனோர் சங்கம் வேண்டாம் – பரிகாரம் பெற்று தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை!

Tuesday, December 31st, 2019

சுயநலம் கொண்டவர்களால் கையாளப்படும் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தை நாம் நிராகரிக்கின்றோம். எமது பிள்ளைகள் இன்னும் உயிருடன் இருப்பார்கள் என நாம் நம்பவில்லை. இழந்த உறவுகளை எண்ணி வாழ்ந்துடிகாண்டிருக்கும் உறவுகளை பாதுகாக்க எமக்கு நிரந்தரமான வாழ்வாதாரக் கட்டமைப்பை பெற்றுத்தாருங்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தனர்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து தமது அவல நிலைமைகள் தொடர்பில் தெரிவித்திருந்தனர். இதன்போதே அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

காணாமல் அக்கப்பட்டவர்களின் வலிகளை அரசியல்வாதிகள் தமது சுயநலத்தேவைக்காகப் பயன்படுத்தகின்றனர். இதனால் நாம் தீர்வுகளையோ பரிகாரங்களையோ பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இழந்துபோன உறவை நினைத்து நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் பிள்ளைகளை, குடும்பத்தை இனியும் இழக்க விரும்பவில்லை. எமது வாழ்க்கை நிலை இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சில சமயங்களில் நாம் ஒரு வேளை உணவு கூட உண்பதற்கு வழியில்லாமல் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அமைத்து இத்தனை நாட்களாக போராட்டங்களை மேற்கொள்கின்றார்கள். இதில் போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்கள் அதை இயக்குபவர்களால் நன்மை பெற்று வருகின்றார்களே தவிர எம்மைப்போன்ற வறியவர்களுக்கு எதனையும் பெற்றுத்தர முன்வருகின்றார்கள் இல்லை.

சுயநலம் கொண்ட சுயநலவாதிகளின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் எமக்கு வேண்டாம். அதை நாம் ஏற்கப்போவதில்லை. எமக்கு நியாயமான தீர்வு வேண்டும் உண்மை நிலை வேண்டும்.

அந்தவகையில் நாம் எஞ்சியுள்ள எமது பிள்ளைகளையும் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள எமக்கு நிரந்தர பரிகாரத்தை பெற்றுத்தருமாறு கோருகின்றோம் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிகளை கேட்டறிந்துகொண்ட அமைச்சர் மிகவிரைவில் உங்களது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி உண்மைகளை கண்டறிவதுடன் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து தேவைப்பாடுகளையும் பரிகாரமாகப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தவேண்டும்  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக நடவடிக்கைக...
கடற்றொழிலாளர்களின் நலன்களுக்கு முரணாக எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பமாட்டாது – அமைச்சர் டக்ளஸ்...