வேலணை பிரதேச முன்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Thursday, February 14th, 2019

வேலணை பிரதேசத்திலுள்ள முன்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வேலணை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களதும் அவர்கள் சார்ந்த ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலும் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிந்து கொண்டார். இதன்போது சிறார்களின் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முன்பள்ளிகளில் பல்வேறு பௌதீகவளப் பற்றாக்குறை காணப்படுவது தெரடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குறித்த பிரச்சினைகள் தொடர்பில் பார்வையிட்டு ஆராய்ந்தறிந்த பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

வேலணை பிரதேசமானது மிகவும் பரந்த பிரதேசமாக காணப்படுகின்றது. ஆனாலும் இங்கு வாழுகின்ற மக்களிடம் பல பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது. மக்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது.

கடந்த காலங்களில் நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்தபோது இப்பகுதியிலுள்ள பல அமைப்புகளுக்கும் கற்றல் மற்றும் கற்பித்தல் சார் துறையினருக்கும் பல திட்டங்களை உருவாக்கி இப்பகுதி மாணவர்களுக்காக பல தேவைப்பாடுகளை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.

அதுமட்டுமல்லாது முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை கூட, அவர்களது உழைப்பிற்கான ஊதியமாக அது காணப்படாத போதிலும் அதிகரித்து கொடுத்திருந்தோம். முன்பள்ளிகளின் பல தேவைப்பாடுகளை பெற்றுக் கொடுத்து சிறார்களின் கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தந்திருக்கின்றோம். ஆனால் தற்போது  அவ்வாறான நிலை காணப்படவில்லை.  இதுவும் எமது மாணவர்களின் பெறுபேறுகள் வீழச்சி நிலைக்கு காரணமாக அமைகின்றது.

அந்தவகையில் இத்தகைய நிலைமைகளை மாற்றியமைப்பதற்கான சூழலை ஏற்படுத்த தமிழ் மக்கள் எமது கரங்களுக்கு தமது அரசியல் அதிகாரங்களை வழங்குவார்களேயானால் வெகு விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வை நாம் பெற்றுத்தருவோம் என்றார்.

Related posts: