வடக்கு மாகாணசபையின் பலவீனம் மருத்துவத்துறையை பெரிதும் பாதித்துள்ளது !

Friday, September 7th, 2018

மருந்தகங்கள் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத நிலையில் மருந்தகங்கள் செயற்படுமானால் அதன் மூலமான மக்கள் அடைகின்ற பாதிப்புகள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற மருத்துவ திருத்தச் சட்டமூலம் 2015ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரச் சபைச் சட்டத்தின் கீழான கட்டளை கணக்காய்வாளர் திணைக்கள உத்தியோகத்தர்களின் சம்பளம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்ற மருந்தகங்கள் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும் என நினைக்கின்றேன். அண்மையில்கூட முல்லதை;தீவு மாவட்டத்திலே இது தொடர்பில் பாரிய பிரச்சினை ஒன்று எழுந்திருந்தது.

பதிவு செய்யப்படாத நிலையில் – அதாவது சட்டரீதியற்ற வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்பட்டிருந்த நான்கு மருந்தகங்களுக்கு எதிராக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதில் ஒரு மருந்தகமானது சுமார் எட்டு வருடங்களாக பதிவு செய்யப்படாத நிலையிலேயே செயற்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. எட்டு வருட காலமாக இவ்வாறு பதிவு செய்யப்படாத நிலையில் மருந்தகங்களை செயற்பட விட்டிருந்த பிராந்திய சுகாதார பணிமனையினரின் அக்கறையின்மை குறித்து இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

மருந்து விற்பனை என்பது இன்றைய காலகட்டத்தில் மாபெரும் வர்த்தகமாக நிலைகொண்டுள்ள போதிலும் இத் துறை வர்த்தகமானது சமுதாய நலன் கருதியதான போக்கினை அடிப்படையாகக் கொண்டிருத்தல் அவசியமாகும்.

Related posts: